Sunday, June 13, 2010

முட்டாள்தனமான அரசியல்

              அரசியல், இந்த வார்த்தையை கேட்கும் போது ஒருவித அருவருப்பே ஏற்ப்படுகிறது. அரசியல் இல்லாத இடமோ,  மனிதர்களோ இல்லை என்றாலும், அதில் நேர்மையாக இருப்பவர்கள் வெகு சிலரே.  நம்முடைய தினசரி வாழ்க்கையில்  நேர்மையான அரசியல் கொண்டவர்கள், சுயநல அரசியல் கொண்டவர்கள், முட்டாள்தனமான அரசியல் கொண்டவர்கள் என மூன்று விதமான மனிதர்களை காணலாம்.

              நேர்மையான அரசியல் கொண்டவர்கள் எந்தவிதமான பக்கசார்போ, குழுமனப்பாண்மையோ இல்லாமல் நடைபெற்ற அல்லது நடைபெறுகின்ற நிகழ்வினை ஆய்ந்து சரியான பக்கம் தங்கள் ஆதரிவனை தருவர்.

                சுயநல அரசியல் கொண்டவர்கள் எந்த நிலைபாடும் இல்லாமல் தன் சொந்த அல்லது சாதி அல்லது குழுவின் நலனுக்காக அல்லது புகழுக்காக மட்டுமல்லாமல் வெறும் மனதிருப்திக்காக மட்டும் கூட எவரையும், எவருடைய செயலையும் கருத்தையும் கொச்சைபடுத்துவதையும் முடிந்தால் எதிராலியின் நல்ல செயலை கூட கெடுத்துவிடுவர். அது போல தங்களுடைய எதிரியை அழிக்க எத்தனை ஆயிரம் அப்பாவிகளையும் சாகடிப்பர் அல்லது சாகடிப்பதை நியாயப்படுத்தவர்.       

மூன்றாவது ரகம் பரிதாபமானது, இது முட்டாள்தனமான அரசியலை உடையவர்கள். இவர்கள் தங்களுடைய உடைமை, உயிரை பணயம் வைத்து பிறருக்காக போராடுபவர்கள். ஆனால் இவர்களுடைய செயலின் பலனை அனுபவிப்பவர்கள் இவர்களுடைய செயலினை அறிந்து இருப்பார்களா என்பது கூட ஐயமே. நாம் யாருக்காக துயருறுகிறோமோ அவர்களுக்கு நம்முடைய வலி, நம் குடும்பம் அடைகின்ற துயரம் தெரியாதது  போலவே போராட்டத்தின் விளைவாக கிடைக்கின்ற பலனின்(பலன் கிடைத்தால்) அருமையும் தெரியாது.

உதாரணமாக மதுரையில் உயர்நீதிமன்றில் தமிழில் வாதிட அனுமதி கோரி கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் 6 வழக்கறிஞர்களை சொல்லலாம். தமிழகத்தில் ஆயிரக்கணக்காண வழக்கறிஞர்கள், மாணவர்கள் இருக்க வெறும் 6 பேர் தங்களுடைய உடல் நலனை கெடுத்துக்கொண்டு தங்கள் குடும்பத்தின் நிம்மதியையும் குலைத்து அடையப்போவது ஒன்றுமில்லை.
தன் சுய அடையாளத்தை இழப்பதையே பெருமையாக கருதும் சமூகத்தில் இவர்களின் செய்கை முட்டாள்தனமானதே.

http://www.hindu.com/2010/06/13/stories/2010061354990600.htm

http://www.indianexpress.com/news/madurai-bench-nod-for-arguments-in-tamil/596795/0

Friday, June 11, 2010

அறிமுகம்

வணக்கம். இது என் முதல் பதிவு. சுமாராக 12 வருடங்கள் கணிணியில் பணிபுரிகின்றேன், கடந்த 3 வருடங்களாக தமிழ்மணத்தின் வாசகனாக இருந்தாலும், இப்போழுது தான் எழுதும் எண்ணம் வந்திருக்கிறது. பிறந்து 30 வருடங்கள் கழித்தும் வயதிற்கு வந்து 16 வருடங்கள் கடந்த பிறகே திருமணம் செய்யும் எண்ணம் வந்த்து, எனவே இவ்வளவு தாமதமாக எழுத தொடங்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே. 36 வயதில் எழுத போதுமான அனுபவமும் செய்தியும் இருப்பதாகவே நினைக்கிறேன். அதோடு எனக்கும் ஒரு அரசியல் நிலைபாடு இருக்கிறது எனவே பதிவுலக சண்டைகளில் ஏதேனும் ஒரு குழுவில் இணையும் எண்ணம் உள்ளது எனவே எந்த குழு வடிவேல் குழுவோ அதனை சிபாரிசு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.